சர்வகட்சி அரசு – சஜித் பச்சைக்கொடி!

எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் சர்வ கட்சி அரசாங்கத்திற்குள் பிரவேசிக்க தயாராகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
   
இந்த நாட்டில் மக்களுக்கு தான் வகிக்கும் நிலைப்பாட்டை வகிக்கவும், அதற்கமைய ஆர்ப்பாட்டம் நடத்தவும் உரிமை இல்லையா? ஆர்ப்பாட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டதா?. அது பயங்கரவாத செயற்பாடா?. இது சர்வாதிகார நாடா? என்று கேட்கின்றேன்.

இந்த நாட்டின் பாதுகாப்பு தரப்பினரும் 220 இலட்சம் பேரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகவே இருக்கின்றனர் என்பதனை கூறிக்கொள்கின்றேன்.

நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் அடிக்கடி இங்கே பேசிக்கொண்டிருக்கின்றோம். எப்போதும் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பிலேயே பேசிக்கொண்டிருக்கின்றோம். நாங்களே நன்றாக செய்தோம் என்றும் வேலை செய்ய முடியாத எதிர்க்கட்சி என்றுமே கூறுகின்றனர். பிரதமரும் இவ்வாறு கூறியுள்ளார். பிரதமர் இது பலவீனமான எதிர்க்கட்சி என்று கூறுவாராக இருந்தால் இதுதான் பலமான எதிர்க்கட்சி என்பதனை புரிந்துகொள்ளலாம்.

இப்போது மக்கள் தீர்வுகளையே எதிர்பார்க்கின்றனர். இதன்படி தீர்வு வழங்கும் அரசாங்கத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கான தீர்வு எங்கே? இந்நிலையில் அமைக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கமும் தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஜனாதிபதி மக்களுக்கு தேவையான தீர்வு என்ன என்று சிந்திக்க வேண்டும். இதனால் நாங்கள் எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீர்வுகளை அடிப்படையாகக்கொண்ட வேலைத்திட்டங்களுடன் சர்வ கட்சி அரசாங்கத்திற்குள் நாங்கள் பிரவேசிக்கவுள்ளோம் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!