போராட்டகாரர்களை கைது செய்வதை உடன் நிறுத்துங்கள் – அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை கைது செய்வதையும் ஒடுக்குவதையும் நிறுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தை கையளிப்பதாக உறுதியளித்த போதிலும், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆயுதப்படைகளை பெற்றுக்கொண்டார்.

போராட்டத்தின் காரணத்தை அரசாங்கம் உணரவில்லை
ரணிலை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பிறகும், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.

பல்வேறு இன்னல்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றாக்குறையால் உருவான பொதுமக்களின் போராட்டத்தின் காரணத்தை அரசாங்கம் உணரவில்லை. அடக்குமுறை மூலம் மக்களின் நியாயமான கோரிக்கைகள் அரசாங்கம் தடுக்க முயற்சிக்கிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டம் போன்ற ஒழுங்குமுறைகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்த திஸாநாயக்க, அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!