அடுக்குமாடி குடியிருப்பில் அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடிய 5 வயது சிறுவன்

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 5 வயது சிறுவன், உயிருக்கு போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை விட்டுவிட்டு, சிறுவனின் பாட்டி வெளியே சென்றுள்ளார்.

இதற்கிடையே, கண்விழித்த சிறுவன் தனது பாட்டியை தேடியுள்ளான். பாட்டியை காணாததால் பால்கனி பகுதிக்கு வந்த அச்சிறுவன் அங்கிருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த 20 மாடி கட்டிடத்தின் 19-வது மாடியில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பியை கெட்டியாக பிடித்தபடி கீழே விழாமல் சிறுவன் உயிர் தப்பியுள்ளான்.

அப்பகுதி வழியாக சென்ற வழிப்போக்கர் ஒருவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் அந்தரத்தில் தொங்கியபடி அலறிக்கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர். சிறுவன் 20 நிமிடமாக அந்தரத்தில் தொங்கியபடி உதவிக்கு அலறும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!