தங்கம் வென்ற பிவி சிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
    
இந்த நிலையில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ள பிவி சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தனிச்சிறப்பு வாய்ந்த பிவிசிந்து சாம்பியன்களின் சாம்பியன்! சிறப்பு என்றால் என்ன என்பதை அவர் மீண்டும் மீண்டும் காட்டுகிறார். அவருடைய அர்ப்பணிப்பும் உறுதியும் பிரமிக்க வைக்கிறது. காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!