பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் பதவி தொடர்பில் முடிவு எடுங்கள்:ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வகிக்கும் பீல்ட் மார்ஷல் பதவி சம்பந்தமாக தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரத் பொன்சேகா அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
உயிர் தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும்

இறுதியான போராட்டத்திற்கு கொழும்புக்கு வருமாறும் உயிர்களை தியாகம் செய்தேனும் போராட்டத்தை வெல்ல வேண்டும் எனவும் பொன்சேகா கூறியிருந்தார்.

எனினும் அவரது கோரிக்கைக்கு அமைய போராட்டத்திற்காக மக்கள் கொழும்புக்கு வரவில்லை. ஆனால் மக்களை தூண்டி விடும் வகையில் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளதாக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறுதிக்கட்டப் போரில் இராணுவ தளபதியாக கடமையாற்றிய சரத் பொன்சேகாவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!