அர்ஜுன ரணதுங்கவிடம் நட்டஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட் குழு

இலங்கை கிரிக்கெட் குழு, தேசிய விளையாட்டு சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் அர்ஜுன ரணதுங்கவிடமிருந்து 2 பில்லியன் ரூபாவை நட்டஈடாக கோரியுள்ளது.

நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் அவசர நிர்வாகக் குழு கூட்டத்தில், அர்ஜுன ரணதுங்க அண்மையில் ஊடகம் ஒன்றிட்கு வழங்கிய நேர்காணலின் போது பொய்யான, இழிவான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட விடயங்களை கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இவை, இலங்கை கிரிக்கெட் அணியின் நன்மதிப்புக்கும் நற்பெயருக்கும் பாதிப்பை விளைவிக்கும் வகையில் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் கூறப்பட்ட கருத்துக்களாகும்.

உரிய சட்ட நடவடிக்கைகள்

எனவே ரணதுங்கவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க, இந்த கூட்டத்தின் போது தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பொய்யான அறிக்கையின் மூலம் இலங்கை கிரிக்கெட் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நற்பெயர் இழப்புகளுக்கு 2 பில்லியன் நட்டஈடாக வழங்க கோரி, செயற்குழு உறுப்பினர்கள் அர்ஜுன ரணதுங்கவுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!