இந்தியாவும் இலங்கையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!

இலங்கை மற்றும் இந்தியா என்பன ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். இவை இரண்டும் ஒரே குணாம்சங்களைக் கொண்ட நாடுகளாகும். எனவே இவ்விரு நாடுகளுக்கும் தனியான பயணம் கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
    
இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை இனங்கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி , அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டோனியர் 228 முதலாவது கடல்சார் ரோந்து விமானத்தை இலங்கை விமானப்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே ஆகியோர் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில் ,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படுவது பொதுவான குணாம்சங்களாகும். இரு தரப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். எனவே இரு நாடுகளுக்கும் தனியான பயணம் இல்லை.

வரலாறு இந்தியாவையும் இலங்கையையும் ஒன்று சேர்த்திருப்பதால் எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். பிராந்தியம் மற்றும் உலக நாடுகளின் பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்து சமுத்திரத்தில் உள்ள சிறிய நாடான இலங்கை, உலக வல்லரசாக முன்னேறி வருகின்ற இந்தியாவின் வகிபாகத்தை அவதானித்துக் கொண்டிருக்கிறது.

எனவே அவர்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படும் திறன் அரசாங்கத்திற்கு காணப்படுகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 75 வருட நிறைவை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்திய – இலங்கை உறவுகளுக்கு மாத்திரமன்றி பிராந்தியத்திற்கும் உலகிற்கும் பொதுவான பல பிரச்சினைகளை நாம் இனங்கண்டுள்ளோம். அவற்றைத் தீர்ப்பதற்கு துரிதமாக செயற்பட்டு வருகின்றோம். இராமாயணத்தைப் பொறுத்தவரை, அது இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக இருப்பதோடு ஒரு சில சிறிய வேறுபாடுகள் மாத்திரமே உள்ளன. இந்தியா, இராமனை மாவீரனாகக் கருதும் நிலையில் , இலங்கை இராமன், இராவணன் இருவரையும் மாவீரர்களாகக் கருதுகிறது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!