மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்த வார இறுதியில் தீர்வு! டக்ளஸ் தகவல்

கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு இந்தவார இறுதியிலிருந்து தீர்வு கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மக்கள் ஏற்கனவே பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இந்த நிலையில் அவர்கள் கடல்சார் உணவினை பெற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு அவற்றின் விலை அதிகரித்து காணப்படுவது தொடர்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. 

இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், “இந்த பிரச்சினை இருப்பது உண்மைதான். இந்த நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால் எமது மக்கள் அதிகளவான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.அதற்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் தாராளமாக கிடைப்பதற்கான ஏற்பாடுகளும், முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடற்தொழிலாளர்களை பொறுத்தவரையில், சிறு கடற்தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் தட்டுப்பாடாக இருக்கின்றது.இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மசகு எண்ணையை வடித்து மண்ணெண்ணெய்யாக விநியோகிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை நன்னீர் மீன்பிடியை அதிகரிப்பதற்கான முயற்சி மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நன்னீர் மீன்பிடியை அதிகரிப்பதற்கான முயற்சியை நாடளாவிய ரீதியில் நாங்கள் கொண்டு வருகின்றோம். கிளிநொச்சி மாவட்டத்தில் முறிப்பு எனும் இடத்தில் 30 சிறு குளங்கள் உள்ளன, அதில் 5 குளங்களை புதுப்பித்திருக்கின்றோம்.

குறித்த இடத்தினை நாளைய தினம் பார்வையிட்டு அதனை புனரமைப்பு செய்து விரைவில் இயக்க முயற்சிக்கின்றோம்.இதேவேளை, ஏனைய குளங்கள், வாவிகள் என எல்லாவற்றிலும் நாங்கள் மீன்குஞ்சுகளையும், இரால் குஞ்சுகளையும் விடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!