கண்கவர் கிருஷ்ணர் சிலைகள் சென்னையில் விற்பனைக்கு குவிப்பு

கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி சென்னையில் ஏராளமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை மறுநாள் (19- ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் தயாரான பலவிதமான கிருஷ்ணர் சிலைகள் சென்னையில் விற்பனைக்கு குவிந்து வருகிறது. புரசைவாக்கம், பெரம்பூர், கொசப்பேட்டை, தி.நகர், திருவல்லிக்கேணி, வடபழனி, வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சாலையோர பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

விதவிதமான வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட கிருஷ்ணர்- ராதை சிலைகள் குழந்தை வடிவிலான கிருஷ்ணர், வெண்ணெய் திருடி சாப்பிடும் கிருஷ்ணர், புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் சிலைகள், உள்ளிட்ட பல்வேறு வர்ணம் தீட்டப்பட்ட கிருஷ்ணர் சிலைகள் கண்களை கவருகின்றன.

ரூ.50 முதல் ரூ.2000 வரையிலான விலையில் கண்கவர் கிருஷ்ணர் சிலைகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. 1/2 அடி முதல் 2 அடி வரை களிமண்ணில் தயாரான கிருஷ்ணர் சிலைகள் பலவித வர்ணம் தீட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து சிலை விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-

கிருஷ்ணர் ஜெயந்தி விழாவுக்காக தமிழகம் முழுவதும் இருந்து தயாரான கண்கவர் வண்ண கிருஷ்ணர் சிலைகள் சென்னையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு கிருஷ்ணர் சிலைகள் விற்பனையை அதிகப்படுத்தி உள்ளோம். அதிக அளவில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனையாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.




* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!