புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீது எந்த நேரத்திலும் மீண்டும் தடை விதிக்கப்படும்! பகிரங்க எச்சரிக்கை

தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டால் எந்நேரத்திலும் அந்த அமைப்புகள் மீது மீண்டும் தடை விதிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத அமைப்புகள் என குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடை செய்யப்பட்ட அமைப்புகள், சட்டரீதியாக தங்களை பயங்கரவாதிகள் இல்லை என நிரூபித்து தடைகளை அகற்றிக்கொண்டால் அதில் பிரச்சினை இல்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்றே புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்தது வடக்கு, கிழக்கு மாகாணங்களையாவது அவர்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

எவ்வாறாயினும் தடை நீக்கப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாக இருந்தால் அந்த அமைப்புகள் மீது மீள தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.