கோட்டாபயவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைக்கான காரணத்தை கூறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

தலைக்கணம், வளைந்துக்கொடுக்காத தன்மை மற்றும் தவறான நபர்களிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டமையே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்த நிலைமை ஏற்பட காரணம் துறவிகள் குரல் அமைப்பின் தலைவர் கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மத்தேகொட பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற சமய வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கோட்டாபயவிடம் இருந்து நாட்டுக்கு சௌபாக்கியம் கிடைக்காது என்பதை உணர்ந்தோம்

நாட்டுக்கு சுபிட்சமான சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதாக கூறியே 69 லட்சம் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.எனினும் கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்து மூன்று மாதங்களில் சௌபாக்கியமல்ல அவரிடம் இருந்து நாட்டுக்கு எதுவும் கிடைக்காது என்பதை நாங்கள் உணர்ந்துக்கொண்டோம்.

நான் இதனை அன்றும் கூறினேன் தற்போதும் கூறுகிறேன்.69 லட்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவாகி, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்த கோட்டாபய ராஜபக்ச தற்போது எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலைமை தொடர்பில் மிகவும் வருத்தப்படுகிறேன்.
கோட்டாபய தவறு எதனையும் செய்யவில்லை 

தற்போது அவர் நாட்டுக்கு நாடு சென்றுக்கொண்டிருக்கின்றார். அவர் அப்படி செல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் தவறு எதனையும் செய்யவில்லை. சட்டம் அவரை குற்றவாளி எனக் கூறவில்லை.

அப்படியானால், ஏன் அவர் இந்த நிலைமைக்கு உள்ளாகியுள்ளார்.அவர் நாட்டின் பிரஜை அவருக்கு எந்த நேரத்திலும் நாட்டுக்குள் வர முடியும். நாட்டுக்கு வந்து சுதந்திரமாக வாழ முடியும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!