போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம்: ரிஷாட் பதியுதீன்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதையும்  வன்மையாக கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேலும் தெரிவிக்கையில், கடந்த 30 வருட யுத்தத்தின் போது யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மாத்திரமன்றி அப்பாவி தமிழ் இளைஞர்கள் பலரும் இப்பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, எவ்வித விசாரணைகளுமின்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை போன்றே ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் என முஸ்லிம்களை குறி வைத்து இச்சட்டம் பிரயோகிக்கப்பட்டது.

தற்போது, நாட்டினை நாசமாக்கிய ஆட்சியாளருக்கு எதிராக போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம்இளைஞர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும் தமிழ் இளைஞர்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்ட போதும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இளைஞர்கள் மீது இச்சட்டம் பிரயோகிக்கப்பட்ட போதும் ஏனைய சமூகத்தவர்கள் அதற்கு எதிராக போதுமான அளவில் கைகோர்க்க முன்வரவில்லை.
பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் பயங்கரவாதத்துக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்டதை விடவும் அரசியல் உள்நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என்பது யாமறிந்த உண்மை.

இதற்கமைய நான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த போது இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாடாளுமன்றத்திலே மிகவும் காத்திரமாக குரல் கொடுத்த ஒருவர் என்பதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன்.

இதேவேளை அவ்வாறான ஒருவர் இன்று ஜனாதிபதியாக இருக்கின்ற நிலையில், அறவழிப் போராட்டக்காரர்களை அவரது கையொப்பத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்த்து மிகவும் கவலையடைகிறேன்.
மாணவர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகம்

இவ்வாறு பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயக ரீதியில், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பிரயோகிக்கின்ற பொழுது தற்பொழுது நாடு எதிர்கொள்ளும் இக்கட்டான பொருளாதார நிலைமை இன்னும் மோசமடையும் என்பதை அச்சத்தோடு நினைவுகூற விரும்புகின்றேன்.

எனவே, இப்பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டின் சட்டங்களிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். அது மாத்திரமின்றி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!