இலங்கையின் முக்கிய இடங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சீனா!

இலங்கை, சீனாவுக்கு செலுத்த வேண்டிய 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு பதிலாக, இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்களுக்கு அந்த கடனை ஈடு செய்ய விரும்புவதாக சீனா இலங்கைக்கு அறிவித்துள்ளதாக, ஞாயிறு இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமது ஊடகவியலாளர், ஒருவர், இராஜதந்திர தரப்புகளில் இருந்து இந்தத் தகவலைப் பெற்றுள்ளதாக இந்த செய்தி தாள் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முக்கியப் பிரச்சினையாக இருந்த சீனக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக இலங்கை அரசாங்கம் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்று குறித்த செய்தித்தாள் கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க சீனா உடன்படவில்லை, அதாவது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க விரும்பவில்லை. இந்த நிலையில், கடன் கொடுப்பனவை பிற்போடுவதற்குப் பதிலாக இலங்கையில் சீனத் திட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சர்வதேச மாநாட்டு அரங்குகள், மைதானங்கள், நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், தாமரை கோபுரம் மற்றும் பல கட்டுமானங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகின்றது.
அவற்றில், இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதில் முக்கியமான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமும் மத்தள விமான நிலையமும் உள்ளடங்கும்.

நுரைச்சோலை ஆலையின் கட்டுமானத்திற்காக முதல் கட்டத்தில் 155 மில்லியன் டொலரும், இரண்டாம் கட்டத்தில் 300 மில்லியன் டொலரும் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 891 மில்லியன் டொலரும் பெறப்பட்டுள்ளது.

மேலும், 214 மில்லியன் டொலர் செலவில் மொரக்கஹகந்த அபிவிருத்தித் திட்டம் மற்றும் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளன. உலக அரசியலில், சீனாவுக்கு எதிரான முகாமுக்கு, இலங்கை தெளிவான நம்பிக்கை காட்டுவதன் காரணமாகவே இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்க சீனா விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

இலங்கை அரசாங்கம், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் நட்புறவுடன் உள்ளது.

அதேநேரம் இராஜதந்திர உறவுகளுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்துடனான, இலங்கையின் பரிவர்த்தனைகளில் சீனா மகிழ்ச்சியடையவில்லை என்று தெரியவந்துள்ளது. 

இலங்கையின் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனக் கடனாகும். இதன் விளைவாக, இலங்கையின் கடனை உறுதிப்படுத்துவதில் சீனக் கடனை மறுசீரமைப்பது மிகவும் முக்கியமானதாகும்.

அதாவது சீனா தனது கடன் தவணைகளின் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கையின் சீனக் கடன் மறுசீரமைக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மறுசீரமைப்பதில் இலங்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தெளிவாக முடிவடையும் வரை இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினம் என குறித்த செய்தித்தாள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!