ஊழல் வழக்கில் ஜோன்ஸ்டனுக்கு எதிராக குற்றப்பத்திரம்!

ஊழல் வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில், அதி குற்றப்பத்திரம் பகிரப்பட்டது.
    
2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் ஜோன்ஸ்டனின் பிரத்தியேக செயலாளர் ராஜ் மொஹிதீன் மொஹமட் சக்கீர் ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அதிகுற்றப்பத்திரம் பகிரப்பட்டது.
மேலும், பிரதிவாதிகள் மூவரையும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் சாட்சிய விசாரணைக்கான தினமாக ஒக்டோபர் 21ஆம் திகதியை நிர்ணயித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு எதிராகவும் இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

முதலாவது பிரதவாதியான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை சட்டவிரோதமான முறையில் தேர்தல் பணிகளுக்காக ஈடுபடுத்தியதாக ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

முன்னர் வாபஸ் பெறப்பட்ட குற்றப் பத்திரத்துக்குப் பதிலாக, கடந்த மே மாதம் 30ஆம் திகதியன்று புதிய குற்றப் பத்திரத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில், ஆணைக்குழு தாக்கல் செய்தது.
தொழிநுட்பக் கோளாறு காரணமாக குற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதற்கு ஆணைக்குழு தீர்மானித்ததை அடுத்து, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஜனவரி 28ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!