கோட்டாவைப் பிரதமராக்க மற்றொரு அரசியல் சூழ்ச்சிக்கு திட்டம்

2018 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சியின் ஊடாக 52 நாட்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டதைப் போன்றதொரு நிலைமை ஏற்படுவதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
    
அதற்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவி நீக்கி , கோட்டபய ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கான சதித்திட்டமே இதன் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மீண்டும் வருவதால் எமக்கு எந்த அச்சமும் கிடையாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , பிரதமர் தினேஷ் குணவர்தனவுமே இதனை எண்ணி அச்சப்பட வேண்டும். காரணம் அவர்களுக்கே தமது பதவிகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ஷ மீது மாத்திரமின்றி ராஜபக்ஷ குடும்பத்தின் மீது மக்கள் கடும் வெறுப்பில் உள்ளனர். எனவே இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷ குடும்பத்தை பாதுகாப்பதற்காக அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம்.

சீதா அரம்பேபொலவை நீக்கி , அந்த இடைவெளியின் ஊடாக கோட்டாபய ராஜபக்ஷவை பாராளுமன்ற உறுப்பினராக்கி , பின்னர் அவரை பிரதமராக்குவதற்கான சதித்திட்டம் தீட்டப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இவ்வாறான அரசியல் சூழ்ச்சியூடாகவே 52 நாட்கள் அரசாங்கம் அமைக்கப்பட்டது. அவ்வாறானதொரு சூழலை மீண்டும் உருவாக்குவதற்கான ஏற்பாடுகளே தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடனை ராஜபக்ஷாக்களை பாதுகாப்பதல்ல , மாறாக பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதேயாகும்.

ராஜபக்ஷாக்களால் ஏற்படுத்தப்பட்ட அழிவிலிருந்து நாடு இப்போது தான் படிப்படியாக மீண்டு கொண்டிருக்கிறது. சுவாசிக்கக் கூட முடியாத நிலையிலிருந்த மக்கள் சுதந்திரமாக சுவாசிப்பதற்கான சூழல் மீண்டும் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவை அனைத்தையும் மீண்டும் சீரழித்து , நாட்டை முற்றாக அழிப்பதற்கு இடமளித்து விட வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!