இனியும் இலங்கை அரசாங்கம் ஏமாற்றக்கூடாது! இறுக்கமான தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் – கோருகிறார் சம்பந்தன்

னித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.அதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தவறியுள்ள நிலையில், மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச சட்டங்களின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தண்டணை வழங்குவதற்கும், சர்வதேச சட்டவரம்பின் மூலமான வழிமுறைகளைப் பயன்படுத்தல் மற்றும் நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு எதிராகத் தடைகளை விதித்தல் உள்ளடங்கலாகப் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளுக்கும் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் நாடா அல் – நஷீப் வலியுறுத்தியிருந்தார்.

அதேவேளை, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் 17 பக்க எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், அதன் சாராம்சத்தையும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பதில் ஆணையாளர் வாசித்திருந்தார்.இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனிடம் எமது செய்தியாளர் வினவியபோதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்ப நாளில் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் ஆற்றிய உரையை வரவேற்கின்றோம்.

பரிந்துரைகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கம்

அதேவேளை, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அறிக்கையையும் நாம் வரவேற்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைககளை இலங்கை அரசு தொடர்ந்து உதாசீனம் செய்து வருகின்றது. அரசியல் தீர்வு சம்பந்தமான பரிந்துரையையும் கூட இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னமும் நடைமுறையில் தான் இருக்கின்றது. அதன் கீழ் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. ஐ.நா.வுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும் அவற்றில் எதுவும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

ஏமாற்றி வந்த இலங்கை அரசாங்கம்

அந்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போட்டுவிட்டு சர்வதேச சமூகத்தை இதுவரை காலமும் இலங்கை அரசாங்கம் ஏமாற்றி வந்தது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் இம்முறை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை வழங்கியே தீர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!