வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம்! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை

குருந்தூர்மலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள்
யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடியிருந்தனர்.இதனை தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்துள்ளனர்.

வழங்கப்பட்ட எச்சரிக்கை
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், ரவிகரன் மற்றும் மயூரனை விடுதலை செய், எமது காணி எமக்கு வேண்டும், எமது மலை எமக்கு வேண்டும், குருந்தூர் மலையை ஆக்கிரமிக்காதே போன்ற கோஷங்களை எழுப்பி தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.மேலும், ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!