பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிய மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவு!

இலங்கையில் இடம்பெற்ற பொருளாதார குற்றங்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் விளக்கியிருந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டுமாயின் இந்த நாட்டில் வேரூன்றியிருக்கும் ஊழல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார்

மேலும், இலங்கையில் கடந்த கால மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், பல்வேறு அரசியல் காரணங்களால் அவ்வப்போது தேசிய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவருவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, நாட்டின் பொருளாதாரத்துடன் நேரடியாக தொடர்புடைய தேசிய கொள்கைகளை அமுல்படுத்துவது தொடர்பான அமைச்சுகள் மற்றும் தற்போது செயற்படும் அமைச்சுகளிடமிருந்து அறிக்கைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சுகளின் விடயதானங்களை வகுக்கும் போது, தேசிய நலனை புறக்கணிப்பது போன்ற காரணங்களால், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கொள்கை ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்வதால், பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட விதம் ஆகியன தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதற்கு பல பொருளாதார நிபுணர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள ஆணைக்குழு, பொருளாதார வீழ்ச்சியின் ஊடாக மக்களின் வாழ்வுரிமை மீறப்பட்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!