போதைப் பொருள் பாவனையை குறைக்க யாழ்ப்பாணத்தில் விசேட படைப்பிரிவு!

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையினை குறைக்க விசேட படைப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது.
    
யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பாவனை தொடர்பில் பலாலி பாதுகாப்பு தலைமையகம் விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பெருந்தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேய சுந்தர தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைதுசெய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அதனுடன் தெடர்புள்ள நபர்களை நீதி முன்நிறுத்துதல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

51 ஆவது காலாட் படைப்பிரிவிற்கு கீழ் காணப்படுகின்ற ஜே 150 கிராமசேவகர் பிரிவின் மாதகல் கிழக்கு பகுதியில் 513 ஆவது காலாட் படைப்பிரிவின் 16 ஆவது கெமுணு ஹேவா படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 100 கிலோகிராம் கஞ்சாவுடன் அதனை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணை களுக்காக விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முகமாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன் அவை தொடர்பான மேலதிக தகவல்களை கீழ்க்காணும் முகவரிக்கோ அல்லது தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!