இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்!

கலாசார மற்றும் மத ரீதியிலான சில வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவும் இலங்கையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
  
மேலும், அந்த ஒற்றுமைகள் பிரதிபலிக்கும் சந்தர்ப்பங்களில் தீபாவளியும் ஒன்று என்றும் அது இன்று முழு உலகமும் கொண்டாடும் பண்டிகையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் கொழும்பு எக்ஸ்பட்ஸ் கலாசார சங்கத்தின் (Colombo Expats Cultural Association) ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தீபாவளி என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் மற்றும் நெருங்கியவர்களை சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் என்று தெரிவித்த அவர், ஐக்கியத்தையும் ஒத்துழைப்பையும் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தமைக்காக கொழும்பு வெளிநாட்டு கலாசார சங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இலங்கை பொருளாதார ரீதியாக சவாலான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் வாழ்க்கையை பிரகாசமாக்குவதற்கு கலாசார சங்கம் ஆற்றிவரும் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கொழும்பு வெளிநாட்டு கலாசார சங்கத்தின் தலைவர் கப்டன் ஏ. பேனர்ஜி மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
      


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!