உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருந்து ரிஷாட் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்  ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்வதாக நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை மீண்டும் இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் கருத்து 

இது தொடர்பில் ரிஷாட் பதியுதீன் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது, 

தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காகவே, ​கோட்டாபய தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதங்கள் தடுத்து வைத்திருந்ததாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் தன் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

அடுத்தத் தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து என்னை 7 மாதங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருந்தார், எவ்வாறாயினும், பதவிக்காலம் முடிவதற்குள் நாட்டு மக்களால் கோட்டாபய ராஜபக்‌ச விரட்டியடிக்கப்பட்டார்.பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் நான் விடுதலை ​அடைந்தேன். உடனடியாக இல்லை என்றாலும் உண்மை கண்டிப்பாக வெற்றிபெறும் எனவும் ரிஷாட் குறிப்பிட்டுள்ளார். 








* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!