வலி. வடக்கில் நேற்று பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதும் மக்களுக்கு முன் பழைய இரும்பு சேகரிப்பாளர்கள் புகுந்து அங்கு கிடந்தவற்றை யெல்லாம் அள்ளிக்கட்டிக்கொண்டு சென்றனர்.
மக்கள் தமது வீடுகளைக் காணிகளைப் பார்க்கச் சென்ற போது அவர்களின் எதிரே பழைய இரும்புகள், பாத்திரங்கள், பித்தளைகளுடன் இவர்கள் வந்துகொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள், லான்ட் மாஸ்டர்கள் என்பவற்றில் வந்து இவர்கள் இரும்புப் பொருள்களைத் திருடிச் செல்வதில் மும்முரமாக இருந்தனர். இப்போதே இப்படியென்றால் வரும் நாள்களில் இந்தப் பகுதிகளில் திருட்டு அமோகமாக இருக்கும் என்கிற அச்சத்தில் மக்கள் உறைந்து போயினர்.
நேற்றைய தினம் வலி. வடக்கில் இராணுவக்கட்டுப்பாட்டில் மயிலிட்டி-கட்டுவன் வீதியில் வடக்குப்புறமாக இருந்த 683 ஏக்கா் காணிகள் மக்கள் பாவனைக்காக நேற்றையதினம் கையளிக்கப்பட்டது.
இந்த காணி விடுவிப்பு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போதே வேறுடங்களை சோ்ந்த பலா் மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் வேகமாக நுழைந்தனர். கண்ணில் அகப்பட்ட பழைய இரும்பு, பித்தளை மற்றும் பொருள்களை அள்ளிக்கொண்டு புறப்பட்டனர்.
நிகழ்வு முடிந்து தமது காணிகளைப் பார்வையிடுவதற்காகத் வந்த மக்கள் தமது கண் முன்னால் நடைபெறும் இந்தத் திருட்டைக் கண்டு விக்கித்துப்போயினர். இரும்புக்கம்பிகள், பைப்கள், காணி உாிமையாளா்கள் விட்டுச்சென்ற பெறுமதிமிக்க பொருள்கள் என்று எல்லாவற்றையும் அவர்கள் அள்ளிச் செல்ல, எதுவும் செய்ய முடியாதவர்களாகப் பார்த்து நின்றினர்.
‘‘ நாங்களே 28 வருடங்களின் பின்னா் எமது காணிகளை காண்பதில் சந்தோசத்தில் வருகின்றோம். அதற்குள் இவா்கள் தமது வேலையைக் க◌ாட்டிவிட்டனர். இனிவரும் நாள்களில் வீடுகளில் எஞ்சிக் கிடக்கும் ஒன்றிரண்டு பொருள்கள்கூடக் கிடக்காது என்று அச்சமாக இருக்கின்றது. இதற்கு உடனடியாக உரியவா்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்தனா்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!