நாட்டிற்கு கிடைக்கும் அதிகமான டொலர்: அறிமுகமாகும் புதிய திட்டம்

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஒக்டோபர் மாதத்தில் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனுப்பும் பணமானது 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 38 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான மொத்த எண்ணிக்கை தற்போது சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

2022 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த இலங்கையர்களிடமிருந்து நாட்டிற்கு 2,929.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வமாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கான புதிய ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி ஒரு பரிவர்த்தனையின் மூலம் ஒவ்வொரு 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை அனுப்புவதற்கும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது பணம் அனுப்பும் முகவர்களால் விதிக்கப்படும் பரிவர்த்தனை செலவை திருப்பிச் செலுத்த இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் உரிமம் பெற்ற வங்கிகளில் பராமரிக்கப்படும் ரூபாய் கணக்குகளுக்குப் பெறப்படும் பணம் மற்றும் கருமபீடம் மூலம் பெறப்படும் பண ரசீதுகளுக்கு மாத்திரமே பொருந்தும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!