குடிபோதையில் பள்ளி பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு பளார் விட்ட மாணவி

ஆம்பூர் அருகே தாறுமாறாக ஓடிய பள்ளி பேருந்து மின்கம்பங்கள் மீது மோதிய விபத்தில் 5 குழந்தைகள் காயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளி பஸ் டிரைவராக மின்னூரை சேர்ந்த அன்பு (வயது 55) பணியாற்றி வருகிறார்.

இன்று காலை டிரைவர் அன்பு குடிபோதையில் பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. மேல்சானாங்குப்பம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது பஸ் தாறுமாறாக ஓடியது.

அங்குள்ள மின்கம்பத்தில் மோதியது. இதில் 2 மின்கம்பங்கள் உடைந்தன. மேலும் பஸ்சில் இருந்த 5 குழந்தைகள் காயமடைந்தனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் பஸ் டிரைவரை அடித்து உதைத்தனர்.

அவர்களுடன் சேர்ந்து பள்ளி மாணவிகளும் டிரைவரை தாக்கினர். இதுபற்றி தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!