கோட்டாபயவிற்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்து இன்று(24.11.2022) உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தியும் இந்த தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரியும் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் தொடர்பில் முன்னதாக சீராக்கல் மனுவை தாக்கல் செய்திருந்த மனுதாரர்களின் சட்டத்தரணிகள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதிவாதியாக குறிப்பிட அனுமதி கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்சவை சம்பந்தப்பட்ட மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிட அனுமதித்துள்ளது. மேலும் குறித்த மனுக்கள் தொடர்பான தமது சமர்ப்பணங்களை டிசம்பர் 16 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை வௌியிட்டுள்ளது.

இது தொடர்பான மனுக்கள் இன்று(24.11.2022) முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி மன்னிப்பை வலுவிழக்கச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!