கோட்டா பதவி விலகியிருக்காவிட்டால் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டார்!

கோத்தாபய ராஜபக்ஷ் அன்று ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியிருக்காவிட்டால் அவர் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டார். அத்துடன் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும் என ஆளும் கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16 விடயதானங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ் பதவி வகித்த காலத்தில் அவர் போராட்டத்திற்கு முகம்கொடுக்க நேரிட்டார். மீரிஹானவில் உள்ள அவரின் வீட்டை சுற்றி வளைத்து ஆரம்பித்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றும் நிலைமைக்கு போனது. கோத்தாபய ராஜபக்ஷ் அப்போது புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுத்த போது பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, சரத் பொன்சேகா, அனுரகுமார, டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் அந்தப் பதவிக்கு குறிப்பிடப்பட்டன. இதன்போது நாங்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இணங்கினோம். அனுபவம் உள்ள, சர்வதேசத்துடன் பேசக்கூடியவருக்கு அந்தப் பதவியை வழங்க இணங்கினோம்.

அத்துடன் ஜனாதிபதியும் பதவி விலக நேரிட்டது. அன்று அவர் நாட்டை விட்டு போயிருக்காவிட்டால் அவர் இப்போது உயிருடன் இருந்திருக்கமாட்டார். அன்று அவர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு போயிருக்காவிட்டால் அவர் உயிருடன் இருந்திருக்கமாட்டார். அப்போது ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க நாங்கள் இணங்கினோம்.

இதன்படி ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்காது வேறு ஒருவர் பதவியேற்றிருந்தால் இந்த நாடு மயான பூமியாகியிருக்கும் என்பதுடன், அவர் போராட்டக்காரர்களின் பணயக் கைதியாகிருப்பார். அத்துடன் போராட்டக்காரர்கள் நாட்டை சீரழித்திருப்பார்கள். ஆனால் ரணில் விக்கிரமசிங்க புதிய இராணுவம், பொலிஸார் இன்றி, இருந்த பாதுகாப்பு பிரிவினரைக் கொண்டே போராட்டத்தை நிறுத்த நடவடிக்கைகளை எடுத்தார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!