மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதியுடன் பேசுவதில் பயனில்லை!

தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி ஒருவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எந்தவொரு பயனுமில்லை. இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்னர் தமிழ் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் தீர்வு காண முடியாது என்றும் தமிழ் தேசத்தை அங்கீகரிக்க கூடிய சமஷ்டி ஆட்சியை நிறுவுவதன் மூலம் தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற உத்தரவாதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும்

மேலும் தீர்வினை சிங்கள மக்களுக்கு வெளிப்படையாக பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அதனை உறுதிப்படுத்தாமல் பேச்சுவார்த்தையில் தமிழ் கட்சிகள் அமர்வது என்பது ஏற்புடையதல்ல என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தின் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது காணப்படக்கூடிய மாகாணசபைகளை விடுத்து மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனே எழுந்து தான் மாவட்ட அபிவிருத்தி சபைகளை நிறுவதற்கு தயார் என்று கூறியிருந்தார். அவை ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் தற்போது அதனை மறுத்து இருக்கிறார்.
இதற்கு பிரதான காரணம் ஒருபுறம் இருக்க தமிழ் கட்சிகளை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அழைத்துள்ள நிலையில் அதில் மாகாணங்களை தவிர்ந்து மாவட்ட மட்டத்தில் அதிகாரங்களை வழங்குவோம் என்று தெரிவித்த நிலையில் தமிழ் கட்சிகள் நிபந்தனைகள் இன்றி அவரிடம் சரணடைய செய்துள்ளார் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி பிரதமர் பதவியை ஏற்க முன்னர் ஒரு தடவை என்னை சந்தித்து உரையாற்றிய போது அவர் தமிழர்களுடைய இனப்பிரச்சினையை இவ்வாறு நீண்ட காலம் இழுபறியில் கொண்டு செல்ல முடியாது. தீர்வு பெற்று கொடுக்க வேண்டும் என்றார் . அதற்கு நான் சமஷ்டி ஆட்சியின் கீழ் மாத்திரமே அதற்கு தீர்வு காணலாம் என்றும். அதில் நீங்கள் உறுதியாக இருங்கள் என்றேன். அதற்கு அவர் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றும் மாவட்ட அபிவிருத்தி சபைகள் அமைப்பது தொடர்பில் என்னுடன் நீண்ட நேரம் உரையாடினார்.

இது தொடர்பில் நான் ஊடகங்கள் மற்றும் தூதரகங்களுக்கும் தெரியப்படுத்தி இருந்தேன். ஆனால் இன்று ஜனாதிபதி மாவட்ட அபிவிருத்தி சபைகள் நிறுவது தொடர்பில் பரிசீலனை மாத்திரமே செய்வதாக கூறியிருக்கிறார். என்னுடன் உரையாடும் பொழுது மாவட்ட அபிவிருத்தி குழு பற்றி தெரிவித்து விட்டு இன்று இவ்வாறு கூறுவது பொய்யாகும். மேலும் மைத்திரி ரணிலுக்கும் மற்றும் ரணில் சுமந்திரனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினைகள் விமர்சனங்களும் இருக்கிறது என்பது அரசியல் நாடகங்களாகும்.

இந்த மூன்று தரப்பினர்களும் அன்று ஒன்றிணைந்தது தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு செய்த சதி அம்பலமாகிய நிலையில் இன்று மாவட்ட அபிவிருத்தி சபை அமைப்பது எனும் புதிய உத்தியில் இந்த மூன்று புள்ளிகளும் மீண்டும் சந்திப்பது என்பது மற்றொரு அரசியல் நாடகமாகும். இந்த நாடகத்தை எங்களுடைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தீர்வு என்னும் பேரில் வரும் போகும் சதி முயற்சியாகும். சமஷ்டி ஆட்சி எனும் போர்வைக்குள் தீர்வு கொண்டு வரப்போவதாக கூறிக்கொண்டு எங்களுடைய விருப்பத்தின் பேரில் நாட்டில் ஒற்றையாட்சியை கொண்டு வருவதற்கான சதி இடம்பெறவிருக்கிறது.

தமிழ் கட்சிகளுடைய ஆதரவினை பெற்றுகொண்டு எதிர்கொள்ள உள்ள நெருக்கடிகளுக்கு சர்வதேச நாடுகளுடைய ஆதரவினை பெற்றுக்கொள்ள கூடிய இந்த சூழ்ச்சியை புரிந்துகொள்ளாமல் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களையும் பாரியதொரு பின்னடைவுக்கு இட்டுச்செல்லும். தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுடைய அரசியல் நாடகங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இனியாவது அரசியல் தலைவிதியை தங்களுடைய கைகளுக்கு எடுக்க வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!