கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும்!

கல்விக்கான பிராந்திய கேந்திர நிலையமாக இலங்கையை மேம்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
    
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் எட்டாவது நாள் இன்று கல்வி, பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தைப் போன்று ஏனைய துறைகளுக்குமான பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

பெருந்தோட்டத்துறையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். ஆனால் அங்கு பணிப்பாளர் சபையில் ஒரு பெண்கள்கூட இல்லை. இதேபோன்று ஆடை தொழிற்துறையிலும் இவ்வாறே. விசேடமாக இந்தவிடயத்தில் அரசாங்கமும் தனியார்துறையினரும் தவறு செய்துள்ளன என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிதார்.

கல்வித்துறையில் முதலீடுகளை மேற்கொண்டு அபிவிருத்தி செய்வதன் மூலம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் எமது மாணவர்களுக்காக செலவிடப்படும் 3 பில்லியன் அமெரிக்க டோலர்களை சேமிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஒருமித்த கருத்துக்கு வருமாறு சபையில் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, தனியார் பல்கலைக்கழகங்களை அறிமுகப்படுத்துவதற்கு அல்லது அதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பெண்களின் பிரச்சினைகள் பற்றி அனைவரும் கவனம் செலுத்துவது அவசியமாகும். அநாதை பிள்ளைகளுக்கும், விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கும் அவசியமான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். தேவையானவர்களுக்கு மாத்திரம் சமுர்த்தியை வழங்குவதன் மூலம் சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மேலும் முறையான விதத்தில் நடைமுறைப்படுத்த முடியும். 25 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய பாடசாலைக் கல்வி கட்டமைப்பு வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் முதல் ஏற்படுத்துவது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!