சூதாட்டத்தில் தன்னையே பணயமாக வைத்து விளையாடிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பெண்ணொருவர் தன்னையே லூடோ சூதாட்டத்தில் பணயமாக வைத்து விளையாடி தோற்ற சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பெண்ணொருவர் ஒன்லைன் விளையாட்டான லூடோவில் சூதாட்டம் செய்துள்ளார். பணத்தை வைத்து விளையாடி அவர் அனைத்திலும் தோற்றுள்ளார். ஆனாலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்த அப்பெண் விபரீத முடிவை எடுத்துள்ளார். அதாவது, தன்னையே அவர் பணயமாக வைத்து விளையாடியுள்ளார். அதிலும் அவர் தோல்வியுற்றுள்ளார்.
    
இந்த நிலையில் வெளியூரில் வேலை பார்த்திருந்த குறித்த பெண்ணின் கணவர், வீட்டிற்கு திரும்பியதும் தன் மனைவியை தேடியுள்ளார். அதன் பின்னர் தனது மனைவி லூடோ விளையாட்டில் தன்னையே பணயமாக வைத்து விளையாடி தோற்றதும், அதனால் வீட்டின் உரிமையாளருடன் சென்றுவிட்டதாகவும் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது வீட்டின் உரிமையாளரே இதனை அவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து உள்ளூர் பொலிசாரிடம் புகார் அளித்தும் பலனளிக்காததால், மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதாப்கரில் உள்ள வாடகை வீட்டில் நானும் என் மனைவியும் வசித்து வந்தோம். இதற்கிடையில் நான் செங்கல் சூளை வேலைக்காக ராஜஸ்தான் சென்று ஆறு மாதங்கள் பணிபுரிந்தேன். அதில் கிடைத்தை வருமானத்தை மனைவிக்கு அனுப்பி வைத்தேன்.
இன்று (நேற்று) நான் வீடு திரும்பியபோது மனைவி வீட்டில் இல்லை. நான் அனுப்பிய பணத்தை வைத்து மனைவி லூடோ விளையாட்டில் செலவழித்துள்ளார் என உரிமையாளர் கூறினார்’ என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!