வடமராட்சியில் சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளன ; சிவாஜிலிங்கம்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்டவிரோத தொழில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடு தொடர்ந்து வருகின்றதால் பாரிய பிரச்சனைகள் ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது வடமராட்சியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

அதாவது அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் குறித்து இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதனால் நேற்று முந்தினம் படகு எரிக்கப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் இந்தப் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்திய சிவாஜிலிங்கம் கலகம் வந்த பின்னர் ஊரடங்கு தேவையில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயத்தில் தெற்கிலுள்ளவர்கள் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்காது தாமதித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆகவே இதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இதற்குப் பதிலளித்த மருதங்கேணி பிரதேச செயலர் அனுமதியில்லாமல் தொடர்ந்தும் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவது குறித்து நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வெளிவர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!