உக்ரைனுக்கு ஆதரவாக போராடும் தமிழ் இளைஞன்!

உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்ற சென்னை – ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர் (32) என்பவரே இவ்வாறு போரில் களமிறங்கியுள்ளார்.
    
தமிழகத்தை சேர்ந்த பாலா சங்கர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடிந்த பின்னர் உக்ரைனில் சுவையான தமிழக உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தை ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர் ‘கார்க்கிவ் தமிழ் சங்கம்’ என்ற பெயரில் ஒரு அமைப்பையும் தொடங்கி நடத்தி வந்த நிலையில், திருமணம் முடித்து குழந்தைக்கு ‘மாறன்’ எனப் பெயரிட்டு தனது சங்கத்தின் பெயரை ‘மாறன் அறக்கட்டளை’ என மகனது பெயற்றை வைத்துள்ளார்.

அறக்கட்டளை மூலம் உதவி கேட்டு வரும் தமிழர்களுக்கும், உக்ரைனில் உள்ள ஏழைகளுக்கும் அவர் உதவி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, இந்தியர்களை மீட்பதற்காகவே சிறப்பு விமானங்கள் உக்ரைனுக்கு அனுப்பி இருந்தது. இதனையடுத்து தனது சகோதரர்களையும், மனைவி, குழந்தைகளையும் தாய்நாட்டுக்கு அனுப்பிய அவர், அவர்களுடன் செல்லாது உக்ரைனிலேயே தங்கிவிட்டார். அங்கு போர் உக்கிரமானதை அடுத்து , உக்ரைன் இராணுவத்தில் இணைந்து போர் புரிய விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் பாலா சங்கரின் விண்ணப்பத்தினை பரிசீலித்த உக்ரைன் அரசு, அவருக்கு இராணுவத்தினருக்கு தேவையான உணவுப்பொருட்களையும், குடிநீரையும் விநியோகிக்க அனுமதியளித்துள்ளது. மேலும், இராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், உளவு விமானங்கள் போன்றவற்றை அண்டை நாடுகளிடம் இருந்து வாங்கி வரும் பணிக்கு உக்ரைன் அவரை அமர்த்தியுள்ளதாக்க கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து உக்ரைன் நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகின்றார்.

இது தொடர்பில் பாலா தெரிவிக்கையில்,
இந்தியா எனது தாய்நாடு. அதே சமயத்தில், என்னை வாழ வைத்த நாடு உக்ரைன். எனக்கும், என் மனைவி, மகனுக்கும் உணவு கொடுத்த நாடு உக்ரைன். அப்படி இருக்கும்போது, அந்த நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்படி என்னால் எப்படி அப்படியே விட்டுவிட்டு வர முடியும்? எனது குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பிவிட்டேன். நான் உக்ரைனை விட்டு செல்ல மாட்டேன். கடைசி மூச்சு இருக்கும் வரை உக்ரைனுக்காக போராடுவேன் என கூறியுள்ளார் .

தினம் தினம் மரணத்தை நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பல ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியுள்ளேன். ஏவுகணைகளை விட ரஷ்ய உளவாளிகள் ஆபத்தானவர்கள். அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டுதான் ஆயுதங்களை எடுத்து வருகிறேன். உயிர் எப்போது போகும் எனத் தெரியவில்லை. அதை பற்றிய பயமும் இல்லை என்றும் பாலா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!