யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பெண் பலி: – கணவர் கைது

பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூ டியூப் பார்த்து பிரசவம் பார்த்ததால் பெண் பலி

திருப்பூர் புதுப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார். அவருக்கு கடந்த ஞயிற்று கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் கார்த்திகேயனும் அவரது நண்பருமே யூ டியூப் -ஐ பார்த்து பிரசவம் பார்த்திருக்கின்றனர். அதன் பின்னர் சிறுது நேரத்திலேயே கிருத்திகா உயிரிழந்திருக்கிறார்.

பிரசவம் பார்த்த கார்த்திகேயனின் நண்பர் யூ டியூப் -ஐ அதிகம் கையாள்பவர். அதை பார்த்து ஏற்கனவே தனது மனைவி மற்றும் வேறு சில பெண்களுக்கு பிரசவம் பார்த்திருப்பதாக கூறி கார்த்திகேயனை சம்மதிக்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கிருத்திகா உயிரிழந்ததை தொடர்ந்தே இச்சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இணையத்தில் உலா வரும் செய்முறை வீடியோவால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது. இம்மாதிரியான விபரீத சிகிச்சைகளை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மனைவிக்கு யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த கணவர் கைது

இந்நிலையில் யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில் பொது சுகாதாரத்துறை அளித்த புகாரின் பேரில் கணவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!