அமெரிக்காவை அழித்துவிடுவோம்; ஈரான் பகிரங்க மிரட்டல்

அமெரிக்கா ஈரானை தாக்கினால், அமெரிக்காவிடமுள்ள அனைத்தையும் அழித்து விடுவோம் என்று ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்கா ஈரானுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளையும் தொடங்கியுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்குமிடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.

ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தனது நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த போது அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரம்ப் டுவிட்டரில், ஈரான் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“இனி எந்தக் காலத்திலும் அமெரிக்காவை மிரட்டக்கூடாது. இதையும் மீறி மிரட்டினால், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பேரழிவை ஈரான் சந்திக்க நேரிடும். உங்களது மிரட்டல்களை நீண்டகாலமாக அமெரிக்கா பொறுத்துக்கொண்டு சும்மா இருக்காது. உங்களுடைய அறிவில்லாத வார்த்தைகள் வன்முறையையும், மரணத்தையும்தான் ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்” என காட்டமாக குறிப்பிட்டு இருந்தார் ட்ரம்ப்.

டிரம்பின் இந்த சவாலை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம் என ஈரான் சிறப்பு படை கமாண்டோ காசிம் சோலிமனி பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

‘ட்ரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு அதனை முடித்து வைக்கும்’ என்று மேஜர் ஜெனரல் கசிம் சபதம் ஏற்றுள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனமான டாஸ்னிம் செய்தி வெளியிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!