தேர்தலை பிற்போடுவதா தேசிய அரசாங்கத்தின் ஜனநாயகம்? – திஸ்ஸ விதாரண

மக்களின் அடிப்படை உரிமையான தேர்தலை பிற்போடுவதா, தேசிய அரசாங்கத்தின் ஜனநாயகம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கேள்வி எழுப்பியுள்ளார்.

‘அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களுக்காகவே தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. புதிய தேர்தல் முறையில் குறைப்பாடுகள் பல காணப்படுகின்றது என்று எதிர்த்த போதும் அரசாங்கம் சில வரையறைகளுக்குள் உட்பட்டே உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தியது ஆனால் பெறுபேறுகள் அரசாங்கத்திற்கு எதிராகவே கிடைக்கப் பெற்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் மாகாண சபையிலும் தொடருமோ என்ற அச்சத்திலே அரசாங்கம் தொடர்ந்து தேர்தலை பல காரணங்களை குறிப்பிட்டு பிற்போட்டு வருகின்றது. ஜனவரியில் தேர்தலை நடத்துவது நம்பமுடியாத விடயமாகவே காணப்படுகின்றது. ஏனென்றால் ஜனவரியில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய அனைத்து விடயங்களையும் முழுமைப்படுத்த வேண்டும் ஆனால் இதற்கான எவ்வித முன்னேற்றகரமான விடயங்களும் தென்படவில்லை ஆகவே ஜனவரியில் மாகாண சபை தேர்தல் இடம் பெறுவது சந்தேகமே.

கடந்த அரசாங்கம் ஜனநாயகத்தை அழித்ததாகவே தேசிய அரசாங்கம் தொடர்ந்து குற்றம் சுமத்துகின்றது. காலத்திற்கு காலம் இடம் பெற வேண்டிய தேர்தலை நடத்தாமல் சுய நல அரசியல் இருப்பு கருதி பிற்போடுவதா ஜனநாயகம். கடந்த அரசாங்கத்தில் அரசியல் தீர்வு கானும் உரிமை மக்களுக்கு தேர்தல் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.யுத்த காலத்திலும் கூட காலத்திற்கு காலம் இடம் பெற வேண்டிய தேர்தல்கள் உரிய காலத்தில் இடம் பெற்றது . அதுவே சிறந்த ஜனநாயகம்

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிலரது சுய அரசியல் தேவைகளுக்காகவே தேர்தல்கள் தொடர்ந்து பிற்போடப்பட்டு வருகின்றது. இந்நிலமை தொடருமாயின் பாரிய எதிர் விளைவுகளை அரசாங்கம் சந்திக்க நேரிடும் . அரசாங்கம் எம்முறையில் தேர்தலை நடத்தினாலும் எதிர்கொள்ள தயார் . ஆகவே வெற்றி பெறுவதற்காக சூழ்ச்சிகளை தவிர்த்து ஜனவரியில் நடத்துவதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!