காங்கிரசை குறை கூற மட்டுமே மோடி வாயை திறக்கிறார்- குஷ்பு கடும் தாக்கு

கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி ஒன்றும் செய்யவில்லை, காங்கிரசை குறை கூற மட்டுமே மோடி வாயை திறக்கிறார் என்று குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

60 ஆண்டுகளாக காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை என்று பா.ஜனதா கூறுகிறது. நீங்கள் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்று நாங்கள் கேட்கிறோம். காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை என்று பொய் சொல்லித்தான் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

கடந்த 4 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி எப்படி இருக்கிறது? இந்த 4 ஆண்டுகளில் ஒன்றும் செய்ய வில்லை. எல்லா இடங்களிலும் கருப்பு கொடி காட்டி ‘மோடி கோ பேக்’ என்பது டிரென்டிங்கில் இருந்தது. இது பிரதமர் மோடிக்கு தெரிந்திருக்கும்.

ஏனென்றால் மக்கள் மத்தியில் மக்களை சந்திப்பதற்கு தைரியம் இல்லாதவர் பிரதமர் மோடி. அவர் ஆகாயத்தில் பறக்கும்போது ரோட்டில் தடை ஏற்படுத்துவார்கள். ஒரு கட்டிடத்தில் இருந்து பக்கத்து கட்டிடத்துக்கு சாலையில் செல்ல மாட்டார்.

நடுவில் இருக்கும் சுவரை இடித்துக் கொண்டுதான் போவார். அவ்வளவு தைரியசாலியான பிரதமர் மத்தியில் இருக்கிறார். எதற்கும் வாய் திறக்காத பிரதமர் மோடி காங்கிரசை குறை கூற மட்டுமே வாய் திறக்கிறார்.

அடித்தட்டு மக்களை பற்றி சிந்திக்கவும் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் மோடிக்கு அக்கறை இல்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமியை கோவிலில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீலநிற அம்பேத்கரின் சிலைக்கு காவி நிறம் பூசப்பட்டது. ஆனால் அம்பேத்கர் எந்த நிறத்தையும் சார்ந்தவர் அல்ல. அவர் நிறமற்றவர்.

நாட்டில் நடப்பவற்றை பார்த்தால் அம்பேத்கர் மீண்டும் வரமாட்டாரா என்று நினைக்கத் தோன்றுகிறது.

எச்.ராஜா வெளியில் வந்து பேசட்டும். அவருக்கு நான் பதில் சொல்கிறேன். பிரதமர் மோடியின் செயல்களுக்கு 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தல் பதில் சொல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!