ஒரே வீட்டில் இறந்து கிடந்த 7 பேர்: – தற்கொலையா?

இந்தியாவில் ஒரே வீட்டில் இறந்து கிடந்த 7 பேர் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமம் அர்சாண்டே கிராமத்தில் தீபக் குமார் ஷா, தனது சகோதரர், பெற்றோர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இந்த 7 பேரும் நேற்று தூக்கிட்டு இறந்ததாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதால் நேற்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு பொலிசார் விரைந்தனர். அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் மிஸ்ரா கூறுகையில், தீபக் தனிப்பட்ட முறையில் பிசினஸ் செய்து வந்தார். இதனால் அவருக்கு கடன் ஏற்பட்டிருக்கும், சமீபகாலமாக கடன் தொல்லையில் இருந்தார் என்பது மட்டும் உண்மை, அவரது சகோதரருக்கும் வேலை மற்றவர்களும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தான் இருந்தனர் என்று கூறியுள்ளார்.

மேலும் பொலிசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், 7 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளனர். இருப்பினும் இது கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபக்கின் மகள் வழக்கமாக பள்ளி வேனில் செல்வது வழக்கம். அதேபோல நேற்றும் குழந்தையை அழைத்து செல்ல வந்த பள்ளி வேன் நீண்ட நேரமாக ஒலி எழுப்பிய போதும் தீபக் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை, இதன் காரணமாக பள்ளி வேனில் இருந்த குழந்தை ஒன்று வெளியே வந்து தீபக் ஷாவின் வீட்டை எட்டி பார்த்துள்ளது.

அப்போது வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை குழந்தை பார்த்துள்ளது. அதன் பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவரது சகோதரும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும், மற்றவர்கள் அனைவரும் பெட்டில் பிணமாகவும் கிடந்துள்ளனர்.கடிதம் ஏதும் இருக்குமா என்று பொலிசார் வீட்டை சோதனை செய்த போது அங்கு கடிதம் ஏதும் சிக்கவில்லை என்றும் பிசினஸ் சரியாக செல்லாத காரணத்தினால், தீபக்கின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!