மீன் விற்கும் மாணவி ஹனன் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் சந்திப்பு

கேரளாவில் மீன் விற்று படித்துக்கொண்டிருக்கும் மாணவி ஹனன், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் என்ற 21 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக மீன் விற்று தனது அன்றாட செலவை சமாளிப்பதுடன், குடும்ப செலவிற்கும் உதவுகிறார். இவரது வாழ்க்கை தொடர்பாக மாத்ருபூமி நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியானது. வீடியோவும் வெளியானது. இந்த கட்டுரை மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பரவிய நிலையில், பலரது ஆதரவையும் பாராட்டையும் பெற்றார். சிலர் உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளனர்.

அதேசமயம் ஒரு சிலர் இதை போலி செய்தி என்று கூறி தாறுமாறாக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யத் தொடங்கினர். பின்னர் அவர் படித்த கல்லூரியின் முதல்வரும், தெரிந்தவர்களும் ஹனன் குறித்து நாளிதழில் வந்த செய்தி உண்மைதான் என்று ஆதரவுக் கரம் நீட்டினர். இந்த விவாதம் நீண்டுகொண்டே சென்ற நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய மந்திரி அல்போன்ஸ் கண்ணந்தனம் ஆகியோரும் மாணவிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், மாணவி ஹனன் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, மாணவிக்கு அறிவுரைகள் வழங்கிய முதல்வர், அரசு சார்பில் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் கூறும்போது, “அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஹனனை சந்தித்தேன். அவளது சிரித்த முகத்தைப் பார்த்தபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். யாருடைய உதவியும் இன்றி படிப்பதற்கு முயற்சி எடுத்ததாக தகவல் வெளியான பிறகு, அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

மாணவிக்கு தேவையான உதவிகள் செய்ய அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தவறாக விமர்சனம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே மாணவி என்னை சந்தித்தார். அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!