“சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்காது”

எதிரக்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முறையாக பயன்படுத்தியிருந்தால் இன்று பொது எதிரணியினர் எதிரக்கட்சி தலைவர் பதவியை கோரமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் செமசிங்க தெரிவித்தார்.

இது தொடரபில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தில் எதிர்கட்சி பதவி எப்போதும் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்பட்டு அரசாங்கத்தின் நிறை குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதுவரை காலமும் பதவிக்கு பொருந்தும் வகையில் செயற்படவில்லை. குறிப்பாக மாகாண சபை தேர்தல் தொடர்ந்து பிற்போடுவது தொடர்பில் எவ்வித அழுத்தங்களையும் எதிர் கட்சி சார்பில் அவர் தெரிவிக்கவிலை்லை. ஆகவேதான் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டு பொது எதிரணியினர் கோரி நிற்கின்றனர்.

2015 ஆம் ஆண்டு பொது தேர்தலை தொடர்ந்து முறையாக எதிர்கட்சி தலைவர் பதவி பொது எதிரணியினருக்கு வழங்கப்பட்டிருந்தால் இன்று பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால் தேசிய அரசாங்கம் 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிர்கட்சி பதவியை வழங்கி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது.

இந் நிலையில் தேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஆட்சி கவிழ்ப்பு போராட்டம் நேற்று ஆரம்பமாகியுள்ளதுடன் எதிர்வரும் செப்டம்ர் மாதம் 05 ஆம் திகதி நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அரசாங்கம் இறுதிக்கட்ட அண்மித்து வருகின்றது. தேசிய வளங்களை சர்வதேசம் கைப்பற்ற முன்னர் எதிர்கட்சி தலைவர் பதவியை பொது எதிரணியினர் கைப்பற்ற வேண்டும். இவ்விடயத்தில் சபாநாயகர் நடுநிலையாக செயற்பட வேண்டும் இல்லாவிடின் பாரிய விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!