பெல்ஜியம் செல்ல முற்பட்ட யாழ். இளைஞர் கட்டுநாயக்கவில் கைது!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, பெல்ஜியத்துக்கு செல்ல முயன்ற, இலங்கை பிரஜையொருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட அந்நபர், மேலதிக விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர், இலங்கையிலிருந்து, சிங்கப்பூருக்கு கடந்த 2ஆம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று அதிகாலை நாடு திரும்பிய அவர், பெல்ஜியம் நோக்கி பயணிப்பதற்கான, கடவுச்சீட்டை கையளித்துள்ளார். அதனை சோதனைக்கு உட்படுத்தியபோது, அந்த கடவுச்சீட்டு மலேசியா கடவுச்சீட்டென்றும், அது போலியானது எனவும், குடிவரவு-குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

அதனையடுத்தே, அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், “தான் பயணித்த விமானத்தில் வைத்தே, மேற்படி கடவுச்சீட்டை தன்னிடம் வழங்கப்பட்டது என்றும், அதனைப் பயன்படுத்தியே, பெல்ஜியத்துக்கு பயணக்கவிருந்ததாக தெரிவித்துள்ளார்” என்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!