ஈரானுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் எவரும் அமெரிக்காவுடன் வர்த்தகம் எதனையும் மேற்கொள்ள முடியாதென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான புதிய தடைகள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்தே அவர் மேற்படி எச்சரிக்கையை டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னால் வெளியிடப்பட்ட செய்தியின் மூலம் விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள சில தடைகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எண்ணெய் ஏற்றுமதிகளுடன் தொடர்புடைய கடுமையான தடைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளன.
இந்தத் தடைகள் உளவியல் ரீதியான போராகவுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரோஹானி, இது ஈரானியர்கள் மத்தியில் பிரிவினையை விதைப்பதாகவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தத் தடைகள் குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியாயஸ்தம் செய்யக்கூடிய வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களைப் பாதுகாக்கப் போவதாக அது சூளுரைத்துள்ளது.
ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா இந்த வருட ஆரம்பத்தில் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு எதிரான மேற்படி தடைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அந்த அணுசக்தி உடன்படிக்கையானது ஈரான் தனது சர்ச்சைக்குரிய அணுசக்தி செயற்பாடுகளை வரையறை செய்வதற்கு பதிலீடாக அந்நாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
அந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமானதாகவுள்ளதுடன் மோசமான ஒன்றென டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஈரானுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் புதிய பொருளாதார அழுத்தம் மூலம் அந்நாட்டை புதிய உடன்படிக்கையொன்றுக்கு இணங்க வைக்க முடியும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகத்தை மேற்கொள்ளும் கம்பனிகளைக் கவசமாகவிருந்து பாதுகாக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ள நிலையில், ஈரானுடனான வர்த்தகப் பங்காளிகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக இதுவரை விதிக்கப்பட்டதிலேயே மிகவும் கடுமையான தடைகள் தற்போது விதிக்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
“நான் உலக சமாதானத்தை விடவும் வேறு எதனையும் கோரவில்லை” என அவர் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!