“ஜனநாயகமற்ற அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான போராட்டத்திற்கு தயாராகவே உள்ளோம்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரசாங்க தரப்பினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இந் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எமது போராட்டத்தைப்பற்றி கருத்து வெளியிட வேண்டிய எந்த அவசியமும் இல்லை” என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

“அரசாங்கத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தினால் கலக்கமடைந்துள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நாட்டின் தலைவர் வகையிலோ அல்லது அரசு செயன்முறை தொடர்பிலோ குறிப்பிடாமல் எமது போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறிக் கொண்டிருக்கின்றார். அத்தோடு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் இதையே கூறிக்கொண்டிருக்கின்றனர்.

லிப்டன் சுற்று வட்டாரத்தில் நாம் கடந்த வாரம் மேற்கொண்ட போராட்டத்திலேயே அரசாங்கத்தில் கலவர நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்தும் செப்டெம்பர் 5ஆம் திகதி ஜனநாயகமற்ற அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான போராட்டத்திற்கு தயாராகவே உள்ளோம்.

எனவே எம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை விமர்சிப்பதை விடுத்து மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். அதே வேளை இனியும் காலம் தாழ்த்தாமல் மாகாண சபைத் தேர்தல் வெகு விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!