வாத்துகள் நீச்சல் அடிப்பதால் தண்ணீரில் ஆக்சிஜன் கூடுகிறது – திரிபுரா முதல்வர்

ஏடாகூடமாக எதையாவது சொல்லி நெட்டிசன்கள் வாய்க்கு அவல் போடும் திரிபுரா முதல்வர் இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் கூடுவதற்கான காரணத்தை கூறி வைரல் ஆகியுள்ளார்.

திரிபுரா முதல்வராக சில மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றவர் பிப்லப் குமார் தேப், பாஜகவை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர், “மஹாபாரதம் காலத்திலேயே இணையதளம் இருந்தது” என கூறியிருந்தார். இந்த கருத்து கிண்டலுக்கு உள்ளாகவே, “குறுகிய மனம் கொண்டவர்களால் மட்டுமே அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என சமாளித்தார்.

இதனால், பிப்லப் தேசிய அளவில் கிண்டலுக்கு உள்ளாகவே, பா.ஜ.க எம்.எல்.ஏ, எம்.பி.க்களிடம் நரேந்திரமோடி ஆப் மூலம் பேசிய பிரதமர் மோடி, மீடியாக்களுக்கு மசாலா தரும் விதமாக யாரும் கருத்து கூற வேண்டாம் என தெரிவித்தார். கட்சியின் செய்திதொடர்பாளர்கள் தவிர மற்றவர்கள் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல வேண்டாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

மோடி பேசிய சில நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிப்லப் குமார் தேப், ஐஸ்வர்யா ராய் இந்திய அழகை பிரதிபலிக்கிறார். டயானா ஹைடன் இல்லை என பேச சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே ‘சிவில் எஞ்சினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுந்த தகுதி வாய்ந்தவர்கள், மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் அல்ல’ என பிப்லப் பேசினார்.

‘சிவில் எஞ்சினியர்கள் கட்டிடத்தை எப்படி கட்டுவது என்பதை அறிந்தவர்கள். அரசு திட்டங்களை அவர்களால் முறையாக கட்டமைக்க முடியும். மெக்கானிக்கல் எஞ்சினியர்களுக்கு எப்படி தெரியும்?’ எனவும் அவர் கூறியிருந்தார். பிப்லப்பின் இந்த கருத்தை முன்வைத்தும் பலர் அவரை கிண்டல் செய்தனர்.

இந்நிலையில், மீண்டும் பிப்லப் வைரலாகியுள்ளார். இம்முறை தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடுவதற்கான காரணத்தை அவர் விளக்கியுள்ளார்.

ருத்ராசாகர் பகுதியில் நடந்த படகுப்போட்டியை தொடக்கி வைத்த அவர் பேசுகையில், “ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது” என பிப்லப் கூறினார்.

எந்த விதமான அறிவியியல் தரவுகளும் இல்லாமல் முதல்வர் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என அம்மாநில கட்சிகள் இதனை விமர்சனம் செய்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!