மியான்மர் நாட்டு ரகசியத்தை திருடியதாக இரு நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை

மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு எதிரான இன அழிப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில், மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக ரய்ட்டர்ஸ் என்னும் பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

ரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன் டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோர் நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் முக்கிய ரகசியத்தை திருடியுள்ளனர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என உத்தரவிட்டார்.

கையில் விலங்குடன் சிரித்த முகத்துடன் வெளியே வந்த இரு நிருபர்களும் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்தனர். இந்த அரசு எங்களை சிறையில் அடைத்து வைக்கலாம். ஆனால், மக்களின் காதுகளையும் கண்களையும் மூடிவிட முடியாது என கியாவ் சொய் ஊ குறிப்பிட்டார்.

தங்களது நிருபர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனை தொடர்பாக கருத்து தெரிவித்த ரய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜே அட்லர் ‘இன்று மியான்மருக்கும் உலகெங்கும் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் சோகமான நாள்’ என தெரிவித்துள்ளார்.

இந்த தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல் வலுத்துவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!