இனிதான் இம்ரான் கானின் சுயரூபம் வெளிப்படும் – முன்னாள் மனைவி பேட்டி

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் அளித்த பேட்டியில், இம்ரான் கானின் சுயரூபம் இதன்பிறகே வெளிப்படும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் கான் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘பாகிஸ்தானில் நிலவும் ஊழல் குறித்து நீங்கள் வெளியிட்ட புத்தகம் இம்ரான் கானை தாக்கி எழுதப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் கண்டுகொள்வதில்லை. அந்த சமயங்களில் நான் காது கேளாதவள் ஆகிவிடுவேன். இந்த புத்தகத்தில் இருக்கும் விஷயங்கள் மக்கள் அறிந்துகொள்வதற்கான சரியான நேரம் இது என முடிவு செய்தேன்., எனவே புத்தகத்தை வெளியிட்டேன். இம்ரான் கானிடம் எப்போதும் ஒழுக்கத்தை எதிர்ப்பார்க்க முடியாது. அவர் தற்போது அதிக செல்வாக்குடன் இருப்பதால், இனி அவரது சுயரூபம் வெளிப்படும்.

உங்கள் புத்தகத்தில் இருப்பது பொய் என கூறுகிறார்களே?

ஒரே ஒரு செய்தி நிறுவனம் தவிர அனைவரும் 200 சதவிகிதம் உண்மை என்றே கூறியிருக்கிறார்கள். என்னை பொருத்தவரையில், இம்ரான் கான் அரசியல்வாதி மட்டுமே.

நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

நான் எது செய்கிறேனோ அதுவே அரசியல்.. அரசியல் என்பது பிரதமர் ஆவதோ, அல்லது அமைச்சராவதோ அல்ல. எனக்கு அதில் விருப்பம் இல்லை. நீதியையும், சமதர்மத்தையும் உருவாக்குவதே அரசியல் என நான் கருதுகிறேன். மார்டீன் லூதர் கிங் போல, காந்தி போல, நெல்சன் மண்டேலா போல புதிய தலைமுறை தலைவர்களை என்னால் உருவாக்க முடியும். அப்படி இம்ரான் கானும் இருப்பார் என நம்பித்தான் நாம் அவருக்கு வாக்களித்தோம் ஆனால், அவரும் சாதாரண அரசியல் தலைவர்களின் வழியையே பின்பற்றுகிறார்.’

இவ்வாறு ரேஹம் கான் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!