மெக்சிக்கோவில் பாரிய மனித புதைகுழிகளில் 166 உடல்கள் மீட்பு

மெக்சிக்கோவின் வெரெகிரஸ் நகரில் பாரிய மனித புதைகுழியொன்றிற்குள் 166 உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸட் மாதம் 8 ம் திகதி நபர் ஒருவர் வழங்கிய தகவலை தொடர்ந்து கடந்த ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 32 புதைகுழிகளில் உடல்களை மீட்டதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

30 நாள் அகழ்விற்கு பின்னர் 166 உடல்களை மீட்டுள்ளோம் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மனித உடல்களிற்கு அப்பால் புதைகுழியிலிருந்து ஆடைகள் உட்பட பல பொருட்களை மீட்டுள்ளோம் எனவும் மெக்சிக்கோ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட உடல்கள் கடந்த இரண்டு வருடகாலமாக அந்த புதைகுழிக்குள் இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களை மரபணுபரிசோதனைக்காக முன்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மெக்சிக்கோவில் மிகமோசமான குற்றச்செயல்கள் இடம்பெறும் பகுதியிலேயே மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க எல்லையை நோக்கி போதைப்பொருட்களை கடத்தும் கும்பல்கள் இந்த பகுதிiயே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் மார்ச் மாதம் மனித புதைகுழியொன்றில் 250 மண்டையோடுகளை அதிகாரிகள் மீட்டிருந்தனர்.

மெக்சிக்கோவில் 2017 ஆண்டு 30,000 படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!