ரேவாரி மாணவி பாலியல் வன்புணர்வு விவகாரம் – 3 குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டது போலீஸ்

அரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் 19 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ராணுவ வீரர் உள்பட தேடப்படும் மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை இன்று நேரில் சந்தித்த எஸ்.பி. நஷ்னீன் பாசின், பாதிக்கப்பட்ட பெண் தற்போது உடல்நிலை தேரி வருவதாகவும், அவரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் எஸ்.பி நஷ்னீன் கூறினார்.

இந்நிலையில், மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் ஒரு ராணுவ வீரர் உள்பட மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் (இடமிருந்து வலமாக) மனிஷ், நிசு மற்றும் ராணுவ வீரர் பன்கஜ் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் 1 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!