போர்க்குற்றம்சாட்டப்பட்ட இருதரப்புக்கும் பொதுமன்னிப்பு – சம்பிக்க ரணவக்க யோசனை

போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து, அனைத்து சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில்,

“இந்தச் சூழலில் போர் தொடர்பான குற்றங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் முடிவெடுக்க வேண்டும்.

சிறிலங்கா இராணுவத்துக்கு உதவிய தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும், இதன் கீழ் பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் அனைத்து தமிழ் கட்சிகளினது இணக்கப்பாட்டையும் பெற வேண்டும்.

12000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்ட போது, அதுபற்றி நாடாளுமன்றத்தில் எந்தவொரு சட்டமும் கொண்டு வரப்படவோ, அமைச்சரவையின் அனுமதி பெறப்படவோ இல்லை.

அரச பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

உள்நாட்டுப் போரின் போது, தனிப்பட்ட நோக்கங்களுக்காக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் குற்றங்களை அடையாளம் காண்பதற்கு, சிறப்பு நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேற்பார்வையில் ஆய்வு நடத்தப்பட வேண்டும்.” என்றும் அவர் கோரியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!