உண்மைகளை மூடி மறைக்கிறது கூட்டமைப்பு! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்மைகளை மூடி மறைத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன இவ்வளவு தாமதமாகி வருகின்றது. 2015ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. அதற்கு இலங்கை அரசாங்கமே தனது இணக்கப்பாட்டினை தெரிவித்திருக்கின்றது.

அதற்கான நியாயங்களாக சர்வதேச மனித உரிமைகள் கோட்பாடுகளை முற்றாக உதாசீனம் செய்வதாலும், கைதிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது.

அவ்வாறான பயங்கரமான சட்டத்தின் கீழேயே தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிளின் விடுதலையை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை மிகவும் பலவீனமானதாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசாங்கமே இணங்கி நீக்குவதாக கூறிய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் விடயத்தில் அதே அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் இருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்த்துக் கொண்டிருப்பதுடன் அந்த அரசாங்கத்தை பாதுகாக்கவும் செய்கிறது.

இது எங்களுடைய பலவீனம். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அரசு இணங்கியதாக கூறியதை பெரிய விடயமாக தூக்கி பிடித்த கூட்டமைப்பு. அதனை நடைமுறையில் செய்வதற்கு அரசு இதுவரை ஒன்றுமே செய்யாமையினை இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் காட்டுவதில் தவறியுள்ளது.

அதேபோல் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றாக புதிய சட்டம் வருகிறது. அது இருப்பதை காட்டிலும் மோசமானது என கூட்டமைப்பே பல இடங்களில் கூறியுள்ளது.

அந்த கருத்துக்கள் வெறுமனே தமிழ் மக்களுக்கு மட்டும் கூறப்படும் கருத்துக்களே தவிர முன்னர் கூறியதைபோல் சர்வதேசத்திற்கு இந்த உண்மையை சுட்டிக்காட்டி அரசாங்கம் தாம் ஜெனீவாவில் இணங்கிய விடயத்தை செய்யவில்லை என காட்டுவதற்கு தவறியுள்ளது.

இதனால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய அரசியல் கைதிகள் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது துரதிஸ்டவசமானது.

மக்களின் அங்கீகாரத்தை பெற்ற அரசியல் தலமைகளே அதனை செய்திருக்க வேண்டும். கடந்த முறை தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றிலேயே நடாத்துமாறு கோரி போராட்டம் நடத்தி தயாரான போது கூட்டமைப்பின் உறுப்பினர் அந்த போராட்டத்தை குழப்பினார்.

இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் 8 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யவேண்டும் எனகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அவர்களுடைய போராட்டங்களுக்கு நாம் ஆதரவு வழங்குவதுடன் அவர்களுடைய போராட்டங்களை வலுப்படுத்தும் வகையில் போராட்டங்களை நடாத்துவதற்கான பேச்சுவார்த்தைகளையும் நாம் நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பொது அமைப்புக்கள், கல்வி சமூகம் உள்ளிட்ட அவைரும் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். இது வெறுமனே அரசியல் கைதிகளுடைய பிரச்சினையோ அல்லது அவர்களுடைய குடும்பங்களுடைய பிரச்சினையோ அல்ல.

இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினதும் பிரச்சினையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தினது பொறுப்புமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் திட்டமிட்டு இழுத்தடிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!