அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் – மோடிக்கு இம்ரான் கடிதம்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், எல்லையில் அத்துமீறல், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் என அடுத்தடுத்து நடந்த அசம்பாவித நிகழ்வுகளால் பேச்சுவார்த்தைகள் முடங்கியது. இரு நாடுகளின் உறவிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

குறித்த நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானும் இந்தியா வும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் உட்பட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும் சந்தித்து பேசவேண்டும் என இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!