தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, சட்டமா அதிபர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோருக்கிடையிலான இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளிகையில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறுகிய கால மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 10 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களில் இருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அநுராதபுரம் பொது மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஏனையோர் அநுராதபுரம் சிறைச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களுக்கு காலையும் மாலையும் சேலைன் ஏற்றப்படுகின்றது. உடல் நிலை மோசடைந்தும் வருகின்றது.
அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி பிரதமருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பேச்சு நடத்தியிருந்தார். சட்டமா அதிபருடன் பேசியே முடிவு செய்யலாம் என்று பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சமயத்தில் சட்டமா அதிபர் நாட்டில் இருக்கவில்லை. அவர் நேற்று நாடு திரும்பினார். இந்த நிலையில் இன்று மாலை 3 மணிக்கு அலரிமாளிகையில் சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பு நீதி அமைச்சரும் அழைக்கப்படலாம் என்று தெரிகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!